பாதை இல்லாமல் பரிதவிக்கும் யாழ்.வளிமண்டலவியல் திணைக்களம்..!!!
வளி மண்டலவியல் திணைக்களத்தின் யாழ். அலுவலகத்துக்கு சென்று வருவதற்கு உகந்த பாதை வசதிகள் இன்மையால் அசௌகரியமான நிலை காணப்படுகிறது. இயற்கை அனர்த்தம், புயல் அபாயம் போன்ற இடர்காலங்களின் போது, பொது மக்களுக்குத் தேவையான அவதானிப்புத் தகவல்களையும், தகுந்த முன்னெச்சரிக்கையையும் வழங்குவதில் யாழ்.- திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட வளி மண்டலவியல் திணைக்களம் பெரும்பங்காற்றி வருகின்றது.
ஆனால், அத் திணைக்களத்துக்குச் செல்வதற்கு உகந்த பாதை இல்லாத காரணத்தினால் அங்கு பணியாற்றும் பணியாளர்கள், அனர்த்த முன்னெச்சரிக்கைச் செய்தி சேகரிப்புக்குச் செல்லும் ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது.
சுமார் 400 மீற்றர் நீளமான மிகக் குறுகிய பாதையின் இரு மருங்கிலும் பற்றை மண்டி ஒற்றையடிப் பாதை போல அப் பாதை காட்சி தருகிறது. பல தடவை அப் பாதையைச் சீர்செய்து தருமாறு அரசியல் தலைவர்களிடமும், திணைக்களத்தின் உயர்மட்டத்திடமும் வேண்டுகோள் முன்வைக்கப்பட்ட போதும் அது தொடர்பில் யாரும் அக்கறை காட்டாத நிலை உள்ளதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது.