நெல்லியடி மத்தியகல்லூரியின் உயர்தர மாணவன் ஒருவர் சக நண்பர்களுடன் குளம் ஒன்றில் இருந்து பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்ற முற்பட்டபோது சேற்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றது.
இச்சம்பவத்தில் கடுக்காய், கட்டைவேலி கரவெட்டி, என்ற முகவரியைச் சேர்ந்த தேவராசா லக்சன் (வயது-18) என்பவரே உயிரிழந்துள்ளார்.
தாய் தந்தையர் இல்லாத நிலையில் சகோதரியுடன் வசித்துவரும் மாணவனும் அவருடைய நண்பர்களும் நுணாவில் குளக்கட்டுப் பிள்ளையார் கோவிலடி குளத்தில் காணப்பட்ட பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதன்போது நிலைதடுமாறி லக்சன் குளத்தின் உள்ளே விழுந்தார் என்றும், அருகில் நின்ற நண்பர்கள் அவரைக் காப்பாற்ற கையைப் பற்றிய போது அவர்களும் உள்ளே விழக்கூடிய அபாயம் காணப்பட்டதாகவும், இதனால் அவர்கள் கைகளை விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அங்கிருந்து ஓடிச்சென்று நீச்சல் தெரிந்தவர்களை அழைத்து வருவதற்கு முன்பாகவே மாணவன் சேற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
