வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கான சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு..!!!


வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருவோரின் தனிமைப்படுத்தல் நடவடிக்கை தொடர்பாக சுகாதார அமைச்சினால் 06 விடயங்களை உள்ளடக்கிய வழிகாட்டல் ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் 14 நாட்கள் கட்டாயமாகத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக அறிவிக்கப்பட்டுள்ள 06 விடயங்களை பின்பற்றி உரிய வகையில், அவர்களது வீடுகளில் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்த சுகாதார அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து வருகை தருகின்றவர்கள் கடைப்பிடிக்க சுகாதார வழிகாட்டல்கள் வருமாறு :

நாட்டுக்குள் வந்த பின்னர் முதல் நாளில் அடிப்படை பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

அரசாங்க சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்துக்குள், அவர்கள் தனி அறையில் அல்லது இரண்டு பேர் சேர்ந்த அறையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இந்த அறையில் தனியான கழிவறை வசதிகள் இருக்க வேண்டும் என்பதுடன், தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஏனைய நபர்களுடன் இணைந்து பயன்படுத்தக்கூடாது.

தனிமைப்படுத்தல் காலத்துக்குள் எந்த வகையிலும் தனிமைப்பட்டுள்ள ஏனையவர்களுடன் நெருக்கமான தொடர்பைப் பேண விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்ட காலத்தின் 12 – 14 ஆவது நாட்களுக்கிடையில் மேற்கொள்ளப்படுகின்ற பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது கட்டாயமாவதுடன், அதன் முடிவுகள் எதிர்மறையாக (Negative) இருக்க வேண்டும்.

14 நாட்கள் தனிமைப்படுத்தல் கால முடிவின் போது அந்த நிலையத்தின் பொறுப்பாளர் மற்றும் பிரதேச சுகாதார அதிகாரி குறித்த நபரின் தனிமைப்படுத்தல் செயல்முறையில் திருப்தி அடைய வேண்டும்.
Previous Post Next Post


Put your ad code here