யாழ். மாவட்டத்தில் கொரோனாத் தொற்றைத் தடுக்கக் கடும் நடைமுறைகள் அறிவிப்பு..!!!


யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த மார்ச் மாதத்தின் முதல் 11 நாள்களில் மட்டும் 101 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளார்கள். எதிர்வரும் நாள்களில் இங்கு இந் நோய் நிலமையானது தீவிரமடையுமென எதிர்பார்க்கப் படுவதனால், பொது மக்கள் அனைவரும் தேவையற்ற ஒன்று கூடல்கள், விழாக்கள், பயணங்களை தவிர்ப்பதுடன் கொரோனாத் தடுப்பு, சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:

சுகாதார நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்படாத நிலையில் கொரோனாப் பரவல் தீவிரமடையலாம் என அஞ்சப்படுகின்றது.

தீவிரமடைந்து வரும் கொரோனாத் தொற்றுப் பரம்பல் தொடர்பாக இன்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கீழ்வரும் நடைமுறைகளை இறுக்கமாக நடைமுறைப்படுத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பலர் ஒன்று கூடும் வகையில் நடாத்தப்படும் எந்தவொரு நிகழ்வும் சுகாதார மருத்துவ அதிகாரியின் அனுமதியினை பெற்ற பின்பே நடாத்தப்பட வேண்டும்.

மேலும், அவ்வாறு அனுமதி பெறப்பட்டு நடாத்தப்படும் நிகழ்வுகளை ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட விதிமுறைகளை இறுக்கமாக பின்பற்றியே நடாத்துமாறு கேட்டுக்கொள்வதுடன், விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பொது மண்டபங்களில் நடாத்தப்படும் திருமணங்களில் ஆகக் கூடியளவு 150 பேர் மட்டுமே கலந்து கொள்ளுதல் வேண்டும். வீடுகளில் நடாத்தப்படுகின்ற திருமண நிகழ்வுகளை 50 பேருக்கு மேற்படாமல் நடாத்துதல் வேண்டும்.

இறுதிச் சடங்குகள் (கொரோனா அல்லாத உயிரிழப்புகள்) ஆகக்கூடியது 50 பேருடன் 24 மணித்தியாலங்களுக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும். இறுதிச் சடங்குக்காக வேறு மாவட்டங்களிலிருந்து உறவினர்கள் வந்து பங்குபற்றுவதை இயன்றளவு தவிர்க்கவும்.

பிறந்த நாள் கொண்டாட்டங்கள், குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் மாத்திரம் வீட்டிலேயே நிகழ்த்தப்பட வேண்டும். மண்டபங்களில் இவ் விழாக்களை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.

கட்டாயம் நடாத்தப்பட வேண்டிய பொதுக் கூட்டங்கள் ஒன்று கூடல்கள் மட்டும் சுகாதார மருத்துவ அதிகாரியின் முன் அனுமதியுடன் 150 பேருக்கு மேற்படாது நடாத்தலாம். நிகழ்வில் பங்கு பற்றியவர்களின் பெயர், விவரங்கள் நிகழ்வு முடிந்ததும் அப்பகுதி சுகாதார வைத்திய அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

வணக்க ஸ்தலங்களில் நடாத்தப்படும் திருவிழாக்கள், வழிபாடுகளில் 50 பேர் மட்டுமே ஒரு நேரத்தில் கலந்து கொள்ள முடியும். அன்னதானங்கள், தண்ணீர் பந்தல்கள் போன்றன நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.

பாடசாலைகள் மற்றும் பிரதேச செயலகங்களினால் நடாத்தப்படுகின்ற விளையாட்டு நிகழ்வுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான பார்வையாளர்களுடன் நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்படும். வேறு எந்தவொரு கேளிக்கை நிகழ்வுகளுக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது.

பாடசாலைகள் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட கோரோனா தடுப்பு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடாத்தப்பட வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களில் கொரோனாத் தடுப்பு சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதும், மாணவர்களுக்கிடையில் சமூக இடைவெளியை தொடர்ச்சியாக பேணுவதும் உரிமையாளர்களின் பொறுப்பாகும்.

பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்பவர்கள் கட்டாயமாக முழு நேரமும் சரியான முறையில் முகக் கவசம் அணிவதுடன் பயணத்தின் போது இயன்றளவு சமூக இடைவெளியைப் பேணி பயண முடிவில் கட்டாயமாகக் கைகளை முறைப்படி கழுவுதல் அல்லது தொற்று நீக்கியைப் பயன்படுத்திக் கைகளைச் சுத்தம் செய்தல் வேண்டும். அத்துடன் இயன்றளவு தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும் பயணத்தின் போது உரிய சமூக இடைவெளியை பயணிகளுக்கிடையில் பேணுவது நடாத்துனர் மற்றும் வாகன சாரதிகளின் பொறுப்பாகும்.

கொரோனாத் தொற்று அபாயமுள்ள இடங்களான சந்தைகள், வர்த்தக நிலையங்கள் ஆகியவற்றில் ஏற்கனவே வழங்கப்பட்ட சுகாதார தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாமை தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள், சந்தைக் குத்தகைக் காரர்கள் மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள், பணியாற்றுபவர்கள் மற்றும் நுகர்வோர் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுவதற்குரிய நடவடிக்கைகளை மேற் கொள்வதுடன் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here