நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு பல கடுமையான முடிவுகளை எடுத்துள்ளது.
கொவிட்-19 நெருக்கடி நிலையைக் கட்டுப்படுத்தும் செயலணியின் மறு ஆய்வுக் குழு இன்று கூடியது.
அதன்படி, பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு குறைந்தது 15 ஆயிரமாக அதிகரிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தவும், தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கவும் சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது.
இன்று எடுக்கப்பட்ட மற்றொரு முடிவு, வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு சிறப்பு தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை உருவாக்குவது.
தீவிர சிகிச்சை பிரிவுகளில் படுக்கை திறனை அதிகரிப்பது, கொவிட்-19 நோயாளிகளுக்கு அதிக ஓக்ஸிஜனை வழங்குவது, மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களுக்கு கூடுதல் தனிப்பட்ட பாதுகாப்பு ஆடைகளை வழங்குவதிலும் கவனம் செலுத்தப்படுகிறது.
கொவிட்-19 நோய்த்தொற்று கண்டறியப்பட்ட நோயாளிகளை அவர்களின் மருத்துவ நிலமைகளுக்கு ஏற்ப தனித்தனியாக பொருத்தமான மருத்துவமனைகளுக்கு அனுப்பும் திட்டத்தை உருவாக்குவது மற்றொரு திட்டமாகும்.
எதிர்காலத்தில், கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை வழங்குவதற்கும் உள்ளூர் மற்றும் மாவட்ட அளவில் அதிகமான மருத்துவமனைகள் அடையாளம் காணப்படும் என்று சுகாதார அமைச்சு அறிவித்தது
