யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் சுகாதார மருத்துவ அதிகாரியால் மூடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலையும் மீறி பாடசாலை அதிபர், பாடசாலையின் மைதானத்தை சனசமூகம் ஒன்றின் விளையாட்டு நிகழ்வுக்கு அனுமதி வழங்கியமையை அடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள் மற்றும் பொது மைதானங்களில் விளையாட்டு நிகழ்வுகளை நடத்த சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது.
அதனால் யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நேற்று நடைபெறவிருந்த விளையாட்டு நிகழ்வை இடைநிறுத்தவும் மைதானத்தை வழங்க வேண்டாம் என்வும் மாநகர பொதுச் சுகாதார பரிசோதகரால் அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
எனினும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அனுமதியளித்துள்ளார் எனத் தெரிவித்து அதிபர், நேற்றைய நிகழ்வை நடத்த அனுமதியளித்திருந்தார்.
சுகாதாரத் திணைக்களத்தின் ஆலோசனை பெறப்படாமல் விளையாட்டு நிகழ்வுக்கு அனுமதியளிக்கவேண்டாம் என தாம் அறிவுறுத்தியிருந்ததாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், சுகாதார மருத்துவ அதிகாரிக்கு தகவலளித்திருந்தார்.
இந்த நிலையிலேயே பாடசாலையை தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மூடியுள்ள யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி, கிருமி தொற்று நீக்கி விசுறுவதற்கு நடவடிக்கை எடுக்கப் பணித்துள்ளார்
