யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள சைவ உணவகத்தின் உரிமையாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கைதடியிலுள்ள ஆரியபவான் சைவ உணவகத்தின் உரிமையாளரே தொற்றிற்குள்ளாகியுள்ளார். கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்ற நிலையில், பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது.
அவருக்கு ஏற்கனவே பரிசோதனை செய்யப்பட்டு, சந்தேகத்திற்கிடமான பெறுபேறு பெறப்பட்ட நிலையில், மீளவும் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியானது.
அவரது மாதிரியை சோதனையிட்டதில், வைரஸ் தொற்று ஏற்பட்டு, குணமடையும் கட்டத்தை எட்டியுள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் அவர் மூலம் வைரஸ் பரவல் ஏற்பட்டிருக்கலாமென சுகாதார வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன.
குறித்த உணவகத்தில் அண்மையை நாட்களில் உணவருந்த சென்றவர்கள், கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டால் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ளும்படி சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பரிசோதனைக்கு செல்பவர்கள் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் நுழைந்து, ஏனைய நோயாளர்களிற்கும் அபாயத்தை ஏற்படுத்தாமல், பாதுகாப்பான முறையில் நுழைந்து, வைத்தியசாலை ஊழியர் ஒருவரை பாதுகாப்பான தூரத்தில் நின்றபடி பரிசோதனை செய்யுமிடத்தை கேட்டறிந்து வீணாக வைத்தியசாலைக்குள் நடமாடாமல் சரியான இடத்திற்கு, விரைவாக சென்று, பரிசோதனையை மேற்கொள்ளும்படி கேட்கப்பட்டுள்ளனர்.