2022ம் ஆண்டுக்கான முதல் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பம் மற்றும் ஆலோசனைகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்களை, பெற்றோர் அல்லது பொறுப்பாளர்கள், பாடசாலையின் அதிபரிடம் எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்னர் கையளிக்க வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விண்ணப்பங்களை பதிவு தபால் மூலம் பாடசாலை அதிபருக்கு அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு குறிப்பிடுகின்றது.
இந்த விண்ணப்பங்களை நிரப்புவதற்கு முன்னர், ஆலோசனைகளை உன்னிப்பாக அவதானித்து, விண்ணப்பங்களை நிரப்புமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதியாகும் போது, பாடசாலைக்கு இணைத்துக்கொள்ளும் மாணவர் 5 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும் எனவும், அதனை உறுதிப்படுத்துவதற்காக பிறப்பு சான்றிதழை சமர்பிக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதி 6 வயதோ அல்லது அதற்கு அதிகமான வயதெல்லையை கொண்ட மாணவர்களை தரம் ஒன்றிற்கு இணைத்துக்கொள்வதானது, 6 வயதிற்கு குறைவான மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதன் பின்னரே முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் தரத்திற்கு நேர்முக பரீட்சையின் ஊடாக 35 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படும் அதேவேளை, முப்படை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 5 மாணவர்களையும் இணைத்துக்கொள்ள முடியும்.
வகுப்பறை ஒன்றில் 40 மாணவர்கள் வரை இணைத்துக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
