யாழ்ப்பாணத்தில் நேற்றும் 59 பேருக்கு கொரோனா தொற்று; தனிமைப்படுத்தப்பட்ட 3 கிராமங்கள் விடுவிப்பு..!!!


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்றிரவு கிடைத்த பிசிஆர் பரிசோதனைகளில் முடிவுகளின்படி 59 பேருக்கு கோவிட்-19 நோய்ம்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 508ஆக அதிகரித்திருக்கின்றது.

இந்த தகவலை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 48 பேர் கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 2 ஆயிரத்து 908 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து778 நபர்கள் சுயதனிமைப்படுத்தல் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டப்பட்டிருந்த தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் அந்தோனிபுரம், மயிலிட்டி ஆகிய இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளும் காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் ஒரு கிராம அலுவலகர் பிரிவும் விடுவிக்கப்பட்டுள்ளன.

மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோருக்கு அரசினால் வழங்கப்படும் பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது.

அதனைவிட வறிய குடும்பங்களுக்கான 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு முதற் கட்டமாக சமூர்த்தி பெறுபவர்கள் அதேபோல் மாற்றுத்திறனாளி கொடுப்பனவு பெறுவோர் வயது முதிர்ந்தோர் கொடுப்பனவு, சிறுநீரக கொடுப்பனவு பெறுவோருக்கு முதற் கட்டமாக வழங்கப்பட்டு வருகின்றது.

அந்த அடிப்படையில் சுமார் 59 ஆயிரம் குடும்பங்கள் இன்று வரை 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவினை பெற்றிருக்கின்றார்கள்.

ஏனைய பகுதியினருக்கு நிதி கிடைத்தவுடன் அதனை வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்குரிய நிதி இன்னும் கிடைக்கப் பெறவில்லை. எனவே பொதுமக்கள் பொறுமையாக இருந்து அந்த நிதியினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும் தடுப்பூசி வழங்கலைப் பொறுத்தவரை முதற் கட்டமாக வழங்கப்பட்ட ஐம்பதாயிரம் தடுப்பூசிகளின் 49 ஆயிரத்து 439 தடுப்பூசிகள் முழுமையாக வழங்கப்பட்டு முடிவுறுத்தப் படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசிகள் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தடுப்பூசி மருந்துகள் இன்றைய தினம் காலையில் இருந்து 4 வைத்தியசாலைகளில் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது பயணத் தடை நடைமுறையில் உள்ள நிலையில் எமக்கு முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றன. சில வீதிகளிலே பொதுமக்கள் அதிக அளவில் நடமாடுகின்றனர். இதனை நாங்கள் 24 மணி நேரமும் பொலிஸாரை வைத்து கண்காணிக்க முடியாது.

தற்பொழுது பொதுமக்கள் தேவைகளை நிறைவு செய்யக்கூடிய வகையில் நடமாடும் விற்பனை நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் மிக மிக அத்தியாவசியமான சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகின்றது – என்றார்

Previous Post Next Post


Put your ad code here