நாட்டில் தற்போது பரவிவரும் கொவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியில், அமல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு காரணமாக பெரும்பாலானோர் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், வீடுகளுக்குள் தற்போது அதிகளவிலான மோதல் சம்பவங்கள் பதிவாகி வருவதாக சில தகவல்கள் அண்மை காலமாக வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், வீடுகளில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களினால், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதன்படி, கடந்த மாதம் 25ம் திகதி இரவு 11 மணி முதல் இதுவரையான காலம் வரை வீடுகளில் இடம்பெற்ற மோதல் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 160 வரை அதிகரித்துள்ளது,
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் அதிகளவானோர் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் மற்றும் பெண் என இருதரப்பினரும் அடங்குவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் மேலும் கூறினார்.
அத்துடன், 25 முதல் 60 வயதுக்க இடைப்பட்டவர்களே, வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பயணக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்ட காலப் பகுதியில் திடீர் விபத்துக்கள் காரணமாக 1339 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.
Tags:
sri lanka news