தற்போதைய காலப்பகுதியில் இணையத்தில் தவறான தகவல்களைப் பரப்பி, அதை சமூக ஊடகங்களில் பகிர்பவர்களைக கண்டறிந்து வழக்குத் தொடர குற்ற விசாரணைப் பிரிவின் சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
பொய்யான பரப்புரைகள் செய்வதன் மூலம் பொதுமக்கள் சிக்கலில் சிக்குவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் தவறான தகவல்களை பரப்பப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
இதுபோன்ற பதிவுகள் பொதுமக்கள் கஷ்டங்களை எதிர்கொள்ள வழிவகுக்கும். நாடு கோவிட்-19 நோய்த்தொற்று மற்றும் டெங்கு நோயை எதிர்த்துப் போராடும் நேரத்தில் ஏமாற்றும் செய்திகள் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்றன.
குழுக்களிடையே பகிரப்பட்ட செய்திகளையும் பிற இடுகைகளையும் அனுப்பும் நபர்களை குற்ற விசாரணைப் பிரிவின் சிறப்புக் குழு விசாரிக்கும்.
குற்ற விசாரணைப் பிரிவின் சைபர் குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் சிறப்புக் குழுவில் இருப்பார்கள்.
ஒரு நபர் பீதியை ஏற்படுத்தினால் அல்லது பொதுமக்களை ஏமாற்றினால், அது தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையை மீறும் விதிகளின் கீழ் இன அல்லது மத அடிப்படையிலான தவறான தகவல்கள் பரப்பியதாக வழக்குத் தொடரப்படும் – என்றார்
Tags:
sri lanka news