இணுவிலில் நள்ளிரவில் கைக்கோடாரிகளைக் காண்பித்துக் கொள்ளை; ஒருவர் சரண் – மூவர் கைது..!!!


இணுவிலில் நள்ளிரவில் வீடு புகுந்து கைக்கோடாரிகளைக் காண்பித்து அச்சுறுத்தில் 21 பவுண் நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர் ஒருவர் 13 தங்கப் பவுண் நகைகளுடன் சட்டத்தரணி ஊடாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நேற்றுச் சரணடைந்த நிலையில் நேற்றிரவு மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் மூவர் தொடர்புடைய நிலையில் அவர்களுக்கு உதவியதாக ஒருவர் என நால்வர் பொலிஸ் விசாரணையில் உள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 3ஆம் திகதி இணுவிலில் உள்ள வீடொன்றுக்குள் நள்ளிரவு 12.45 மணியளவில் புகுந்த மூவர் கைக்கோடாரிகளைக் காண்பித்து வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தில் 21 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையில் ஒக்டோபர் 4ஆம் திகதி திங்கட்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டது. அதுதொடர்பில் தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் ஒருவர் தனது சட்டத்தரணி ஊடாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நேற்று சரணடைந்தார். அவர் 13 தங்கப் பவுண் நகைகளை பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தார்.

இந்த நிலையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் இருவரிடமிருந்தும் 2கைக்கோடாரிகள் மற்றும் 6 பவுண் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர்கள் மூவருக்கு உதவியளித்து கொள்ளைச் சம்பவத்துக்கு உடந்தையாகவிருந்த ஒருவரும் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here