Friday 22 October 2021

முல்லைத்தீவில் விலை கட்டுப்பாட்டு அதிகாரிகள் மீது தாக்குதல்..!!!

SHARE

முல்லைத்தீவு மாவட்டத்தில் விலை கட்டுப்பாட்டு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் அவரின் செயற்பாடு அதிகாரிகளை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

நாட்டில் அரசாங்கம் அறிவித்துள்ள கட்டுப்பாட்டு விலையினை மீறி அதிக விலைக்கு வணிக நிலையங்களில் பொருட்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.

நகர் புறங்களில் உள்ள வணிக நிலையங்கள் மற்றும் கிராமப் புறங்களில் உள்ள வணிக நிலையங்களில் அரச கட்டுப்பாட்டு விலையினை மீறி அதிக விலையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனையாகி வருகின்றமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் கடந்த 13.10.2021 அன்று முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பிரதேசத்திற்கு உட்பட்ட முறிப்பு பகுதியில் விலைகட்டுப்பாட்டு அதிகாரிகள் மீது தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள வணிக நிலையம் ஒன்றுக்கு விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சென்றபோது அவர்களிடம் குறித்த நபர் ஒரு நாளைக்கு ஒருவிலையினை தீர்மானிக்கின்றீர்கள் அரசங்கத்தினை தவறான வார்த்தை பிரயோகத்தினால் திட்டிதீர்த்துள்ளதுடன் கையில் வைத்திருந்த தடியினை வைத்து அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட குறித்த நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது குறித்த நபரை 21.10.2021 வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை 21.10.2021 நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது அரச உத்தியோகத்தர்களை தாக்கியமைக்கான இரண்டு இலட்சம் ரூபா ஆட்பிணையில் விடுதலைசெய்ய உத்தரவிட்டுள்ளது.
SHARE