ராகலையில் ஐவர் உயிரிழந்த சம்பவம் - தனது குடும்பத்தை தீயிட்டு படுகொலை செய்தாரா மகன் ?
ராகலை பகுதியில் வீடொன்றில் தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அக்குடும்பத்தை சேர்ந்த மகன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ராகலை பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த 7ஆம் திகதி இடம்பெற்ற தீ விபத்தில் ஐந்து உயிரிழந்திருந்தனர்.
சம்பவத்தில் இராமையா தங்கையா (வயது 61), அவரின் மனைவி செவனமுத்து லெட்சுமி (வயது 57), ஆகியோருடன், மகளான தங்கையா நதியா (வயது 34) இவரின் பிள்ளைகளான, சத்தியநாதன் துவாரகன் (வயது13), (முதல் கணவரின் பிள்ளை) மற்றும் தற்போதைய மோகன்தாஸ் ஹெரோசன் (வயது 01) ஆகியோரே தீயில் கருகி உயிரிழந்தனர்.
நதியாவின் பிள்ளையான ஹெரோசனின் முதலாவது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்று சிலமணி நேரத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்று , வீட்டில் இருந்த ஐவரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.
இந்த விபத்து சம்பவத்தில் வீட்டில் வசித்து வந்த தங்கையாயாவின் மகனான இரவீந்திரன் வீட்டுக்கு வெளியே சென்று இருந்த நிலையில் உயிர் தப்பி இருந்தார்.
உயிர் தப்பிய நபரை பொலிஸார் கைது செய்து கடுமையான விசாரணைகளை முன்னெடுத்து வந்திருந்தனர்.
அந்நிலையில் குறித்த நபர் தீ விபத்து நடந்த தினத்தன்று அப்பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் வாங்கி இருந்தமையை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
அதேவேளை , தீ விபத்து நடைபெற்ற வேளை தீயினை அணைக்க அயலவர்கள் முயன்ற போது , வீட்டில் யாரும் இல்லை என அவர் கூறியுள்ளார். அதுவும் பொலிசாரின் விசாரணை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
அதனை அடுத்து அவரை கைது செய்த பொலிஸார் நீதிமன்றில் நேற்றைய தினம் முற்படுத்திய வேளை எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு வலப்பனை நீதவான் நீதிமன்ற நீதவான் டி.ஆர்.எஸ்.குனதாச உத்தரவிட்டுள்ளார்.