நீரிழிவை குணப்படுத்த முடியுமா? அதாவது நீரிழிவு நிலைக்கு மருந்து பாவித்த ஒருவர் அந்த மருந்துகளை முற்றாக நிறுத்திக் கொள்ளக் கூடிய நிலை ஏற்படுமா? இது நடைமுறைச் சாத்தியமாகுமா? என்பன பொதுவாக பலராலும் கேட்கப்படும் ஒரு விடயமாக இருந்து வருகிறது.
நீரிழிவு நிலைக்கான மருந்துகளை சிலசமயம் நிறுத்திக்கொள்வது சாத்தியம் ஆகக்கூடிய ஒரு விடயமே. சிலருக்கு நீரிழிவுக்கான மருந்துகளை முற்றாக நிறுத்தக்கூடிய நிலை ஏற்படுகிறது. குறிப்பாக பின்வரும் நிலை உள்ளவர்களுக்கு இது சாத்தியப் படக்கூடிய சந்தர்ப்பம் இருக்கிறது.
- கர்ப்ப காலத்தில் நீரிழிவு ஏற்பட்டவர்கள் – கர்ப்ப காலம் முடிவடைந்ததும் நீரிழிவு மருந்துகளை நிறுத்திக்கொள்வது சாத்தியப்படலாம்.
- அழுத்தங்கள் தொற்றுகள் என்பவற்றுடன் நீரிழிவு கண்டறியப்பட்டவர்கள்- அந்த நிலைமைகள் கட்டுப்பாட்டிற்குவந்த பின்னர் நீரிழிவுக்கா மருந்துகளை நிறுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு.
- அதிகரித்த உடல்நிறையுடன் ஒழுங்காக உடற்பயிற்சி உணவுக்கட்டுப்பாடு என்பவற்றில் ஈடுபடாத ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்ட நீரிழிவு நோயாளர்கள் தமது வாழ்க்கை முறைகளை மாற்றி அமைத்து நிறை குறைந்து பொருத்தமான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம்இது சாத்தியப்படலாம்.
- சில மருந்துகள் காரணமாக நீரிழிவு ஏற்பட்டவர்கள் அந்த மாத்திரைகளை நிறுத்தியவுடன் நீரிழிவு நிலை தானாக குறைவடையலாம்.
- சில ஓமோன்களின் அதிகரித்த சுரப்பால் ஏற்படும் நீரிழிவு நிலை அந்த அடிப்படை காரணம் நிவர்த்தி செய்யப்பட்டவுடன் தானாக மறைந்து விடும்.
அமைதியை பேணுதல், சீனி, சர்க்கரை பனங்கட்டி அதிகமுள்ள உணவு வகைகளைத் தவிர்த்தல் போன்ற சிறிய நடவடிக்கைகள் மூலம் நாம் பெரிய பலன்களை பெற்றுக்கொள்ளலாம்.
பொருத்தமான நடவடிக்கைகள் மூலம் மருந்துகளை குறைத்துக் கொள்வதோ நிறுத்திக் கொள்வதோ சாத்தியமாகும்.
ஒரு தடவை நீரிழிவுத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டவர்கள் தொடர்ந்து வரும் காலங்களில் அவர்களின் நீரிழிவு நிலை கட்டுப்பாட்டில் இருந்தாலும் 2-3 மாதங்களுக்கு ஒரு தடவையாவது குருதி குளுக்கோசை சோதித்துப் பார்த்துக் கொள்வது அவசியமாகும். வாழ்க்கை முறையில் சிறுசிறு மாற்றங்களை செய்து பாரிய நன்மைகளை பெற்றுக்கொள்ள முயற்சி எடுப்போம்.
நீரிழிவு நிலை ஒரு பாரிய நோய் என்று எண்ணி மனக்குழப்பம் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இதனைகட்டுப்படுத்த
வழங்கப்படும் மருந்துகள் பக்கவிளைவு குறைந்தவை. எனவே மருத்துவ ஆலோசனை இன்றி இதற்கான மருந்துகளை குறைக்கவோ அல்லது நிறுத்தவோ முயற்சி எடுப்பது பாதுகாப்பானது அல்ல. இந்த நிலையை நாம் மன ஊக்கத்துடன் வெற்றிகரமாக எதிர் கொண்டு சுகதேகியாக வாழ முடியும்.
Dr.சி.சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்
Tags:
Medical