மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பான தடைக்கட்டளையில் முல்லைத்தீவு நீதிமன்றம் திருத்தம்..!!!


தடைசெய்யப்பட்ட இயக்கமொன்றின் நிகழ்வினை நினைவுபடுத்தக்கூடியதாக நினைவுகூரல்களை மேற்கொள்ளமுடியாது. அதேநேரம் இறந்தவர்களுக்கு பொதுவான நினைவுகூரல்களை மேற்கொள்ளமுடியும் என முல்லைத்தீவு நீதிமன்று திருத்தி அமைத்துக் கட்டளை பிறப்பித்தது.

முல்லைத்தீவு நீதிமன்றம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு கடந்த நவம்பர் 17 மற்றும் நவம்பர் 23ஆகிய திகதிகளில் வழங்கிய தடைக்கட்டளையை நேற்று(25) திருத்தி அமைத்து கட்டளை பிறப்பித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு கடந்த 17ஆம் திகதி மற்றும் 23 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட எழுபத்திரெண்டு பேருக்கு தடை உத்தரவுகள் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, முள்ளியவளை ஒட்டுசுட்டான், மாங்குளம், மல்லாவி ஐயன்குளம், புதுக்குடியிருப்பு ஆகிய பொலிஸ் நிலையங்களால் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ததற்கு அமைவாக குறித்த எழுபத்திரெண்டு பேருக்கு தடை உத்தரவுகள் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் தடைக்கட்டளைகளில் பிரதிவாதிகளாகப் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தவர்களில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்கள், முன்னாள் எம்பி சாந்தி சிறீஸ்கந்தராசா, கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், புதுக்குடியிருப்புப் பிரதேசசபை உறுப்பினர் சிவபாதம் குகநேசன், சமூகசெயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் ஆகியோர், மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான தடை உத்தரவை நீக்கக்கோரி இன்று(25) நீதிமன்றில் நகர்த்தல்பத்திரம் ஊடாக வழக்குத்தாக்கல் செய்திருந்தனர்.

இந் நிலையில் வழக்கினை ஆராய்ந்த நீதிபதி ரி.சரவணராஜா, ஏற்கனவே வழங்கிய மாவீரர் நாள் நினைவேந்தலை மேற்கொள்வதற்கு எதிரான கட்டளையை திருத்தி அமைத்து கட்டளையாக்கியுள்ளார்.

தடைக்கட்டளைகளில் பிரதிவாதிகளாகப் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கின்றவர்கள் சார்பில் சட்டத்தரணிகளான கேசவன் சயந்தன், எஸ்.தனஞ்சயன், ருஜிக்கா நித்தியானந்தராசா, கணேஸ்வரன் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here