Wednesday 1 December 2021

முல்லை - கூழாமுறிப்பில் வயோதிபர் மீது காட்டு யானை தாக்குதல்..!!!

SHARE

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கூழாமுறிப்பு பகுதியில் வீதியால் சென்ற நபர் மீது காட்டு யானை தாக்கியதில் குறித்த வயோதிபர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

நேற்று கூழாமுறிப்பிலிருந்து கெருடமடு செல்லும் வீதியால் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த வயோதிபர் மீது வீதியோரத்தில் நின்ற காட்டு யானை தாக்கியுள்ளது.

துவிச்சக்கர வண்டியை தூக்கி வீசியபோது முதியவரும் தூக்கி வீசப்பட்டு அவர் காயமடைந்துள்ள நிலையில் யானை அவருடைய துவிச்சக்கர வண்டியை கடுமையாக தாக்கியுள்ளது.

அவர் சத்தமிட்டவுடன் கிராமத்தவர்கள் சென்று யானையை விரட்டியுள்ளனர்.

குறிப்பாக குறித்த பகுதிகளில் காட்டு யானை அதிகம் மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதோடு அண்மையில் கெருடமடு பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கடந்த 25ஆம் திகதி அன்று யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.

குறித்த பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும் இவற்றை கட்டுப்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
SHARE