வவுனியாவில் பதற்றம்- மர்ம நபரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட இளம் பெண்

 


வவுனியாவில் இளம்பெண் ஒருவர் மர்ம நபரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.

இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  

வவுனியா, நெடுங்கேணி - சேனைக்குளம் பகுதியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பெண் மீது இனம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த  துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விவசாய தேவைக்காக பசளை வாங்க தாயாருடன் சென்ற நிலையில், உணவருந்திவிட்டு செல்ல முடிவெடுத்து மீண்டும் வீடு நோக்கி செல்கையில் வீதியில் நீர் நிறைந்திருந்தமையால் தாயாரை வீதியில் இறக்கிவிட்டு நீர் நிறைந்திருந்த இடத்தை கடந்த போதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   

காவல்துறையின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் நாட்டு துப்பாக்கியால் சுடப்பட்டே பெண் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதற்காக துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை இடம்பெற்று வருகின்றது. துப்பாக்கியால் சுடப்பட்டு மரணமடைந்ததனால் அப்பகுதியில் பதற்ற நிலை நிலவி வருகின்றது.

காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.    இந்நிலையில் குறித்த துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபர் இறந்த பெண்ணின் உறவினர் எனவும் தெரிவிக்கப்படுவதுடன் ஏற்கனவே கொலை குற்றத்துக்காக சிறையில் இருந்து வந்த ஒருவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Previous Post Next Post


Put your ad code here