குளவிக்கொட்டிற்கு இலக்கான பாடசாலை மாணவர்கள்

 


ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் எல்பட தமிழ் வித்தியாலயத்திற்கு அருகில் இருக்கும் பாரிய மரங்களில் உள்ள குளவி கூடுகளை அகற்ற நோர்வூட் பிரதேச சபை தவிசாளர் ரவி குழந்தைவேல் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இன்று காலை குறித்த பாடசாலைக்கு மாணவர்கள் செல்லும் போது, மரத்தில் காணப்பட்ட குளவி கூடு கலைந்து மாணவர்களை கொட்டியதில் 17 பேர் பாதிக்கப்பட்டு டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்

பின்னர் அதில் 10 பேர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியதோடு, 4 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் காரணமாக மாணவா்களின் பாதுகாப்பு நலன் கருதி இன்று பாடசாலைக்கு வருகை தந்த அனைத்து மாணவர்களும் வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, ஹட்டன் வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர்.ஏ.சத்தியேந்திராவின் பணிப்புரைக்கு அமைய பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

இதனையடுத்து, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பணிப்புரைக்கமைய பாடசாலைக்கு சென்ற நோர்வூட் பிரதேச சபை தவிசாளர் உட்பட குழுவினர் நிலைமையை ஆராய்ந்ததுடன், மரத்தில் இருக்கும் 5 குளவி கூடுகளையும் அகற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

குளவி கூடுகள் அகற்றியதன் பின் நாளைய தினம் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் வழமைப்போல் நடைபெறும் என நோர்வூட் பிரதேச சபை தவிசாளர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது, நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.ஹெலக்ஸ், சரோஜாதேவி மற்றும் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக உதவியாளர் கே.தயாளன் உட்பட முக்கியஸ்தர்கள் உடனிருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post


Put your ad code here