வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் தமது வலைகளை அறுத்து நாசப்படுத்தியமையைக் கண்டித்து சுப்பர்மடம் மீனவர்கள் ஆரம்பித்த வீதிமறியல் போராட்டம் விரிவடைகிறது.
வடமராட்சி முதல் பொன்னாலை வரையான கரையோர முதன்மை வீதியை மறித்து மீனவர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
அதனால் கடற்கரையோர முதன்மை வீதியூடான பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி கடற்பரப்புக்குள் நேற்றுமுன்தினம் இரவு அத்துமீறிய நூற்றுக் கணக்கான இந்திய மீன்பிடிப் படகுகள் உள்ளூர் மீனவர்களின் வலைகளை அறுத்து நாசப்படுத்தித் தப்பித்தன.
அதற்கு எதிராக பாதிக்கப்பட்ட பருத்தித்துறை சுப்பர்மடம் மீனவர்கள் இன்று முற்பகல் வீதி மறியல் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
அவர்களது போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் வடமராட்சி தொடக்கம் பொன்னாலை வரையான கரையோர முதன்மை வீதியை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
தமது மீன்பிடிப் படகுகளை வீதியின் குறுக்கே வைத்து இந்த போராட்டத்தை மீனவர்கள் முன்னெடுத்துள்ளனர்.