கற்பிட்டி விபத்தில் ஒருவர் பலி

 


பாலாவி - கற்பிட்டி பிரதான வீதியின் நாச்சிக்கள்ளி வேளாங்கண்ணி ஆலயத்திற்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.


கற்பிட்டி பாலக்குடா பகுதியில் நடந்த திருமண விருந்து நிகழ்வொன்றுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி தெற்கு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்ற அதிகாலை வேளையில் கற்பிட்டி பாலக்குடா பகுதியில் இருந்து குறிஞ்சிப்பிட்டி பகுதியை நோக்கிப் பயணம் செய்த சொகுசு கார் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்தமையால் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள தொலைபேசி சேவை வழங்கும் தூணில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதன்போது குறித்த சொகுசு காரில் பயணம் செய்த மூவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அங்கு ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அத்துடன், காயமடைந்த இருவரில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் இருந்து புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், மற்றைய நபர் தொடர்ந்தும் கற்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் உபாலி வீரசிங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here