Sunday 10 April 2022

ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்

SHARE

 


ராமேஸ்வரத்தில் இருந்து கடல் வழியாக படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு கோடி மதிப்பிலான ஐஸ் போதைப்பொருள் நேற்று (9) மீட்கப் பட்டதோடு, போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை கைது செய்து விசாரித்து வரும் ராமேஸ்வரம் பொலிஸார் மேலும் ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு சமீப காலமாக கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்திலிருந்து கடல் அட்டைகள், மஞ்சள், கஞ்சா உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருகின்றன.இதனால் மத்திய, மாநில உளவுத்துறை பொலிஸார், கடலோர பாதுகாப்பு பொலிஸார், கடலோர காவல் படையினர் மற்றும் பொலிஸார் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று சனிக்கிழமை (9) போதைப்பொருள் கடத்தப்பட இருப்பதாக ராமேஸ்வரம் குற்றப்பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து நேற்று சனிக்கிழமை மாலை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் சிறப்பு குற்றப்பிரிவு பொலிஸார் மறைந்திருந்தனர்.

அப்போது தங்கச்சிமடம் பெட்டேல் நகரை சேர்ந்த பிரைட்வின் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப் படகில் மீன் பிடிக்க செல்வது போல் மீனவர் ஒருவர் கை பை ஒன்றை படகில் ஏற்றிக் கொண்டு இருந்தார்.

இதனை கண்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் குறித்த பையில் ´கிறிஸ்டல் மெத்தம் பீட்டாமைன்´ என அழைக்கப்படும் ஐஸ் போதைப்பொருள் உள்ளமை கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து படகின் உரிமையாளர் பிரைட்வின் மற்றும் அக்காள் மடம் புயல் காப்பகம் பகுதியைச் சேர்ந்த டெஸ்மன் ஆகிய இருவரையும் கைது செய்த பொலிஸார் இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய முத்துப்பாண்டி என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட ´கிறிஸ்டல் மெத்தம் பீட்டாமைன்´ என்ற ஐஸ் போதைப்பொருள் உண்மையானதா? என்பது குறித்து ராமநாதபுரத்தில் உள்ள தடவியல் பொலிஸார் ரசாயனம் மூலம் பரிசோதனை செய்து கிறிஸ்டல் மெத்தம் பீட்டபமைன் என்று உறுதிபடுத்தினர்.

ராமேஸ்வரம் பொலிஸாரால் கைபற்றப்பட்ட 957 கிராம் ஐஸ் போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ஒரு கோடி ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கடத்தல் போதைப்பொருள் பிடி பட்டதை அடுத்து கடலோர பகுதிகளிலும், இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையிலும் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.
SHARE