Tuesday 10 May 2022

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைகளில் 9 பேர் உயிரிழப்பு - 88 வாகனங்கள், 103 வீடுகளுக்கு சேதம்..!!!

SHARE

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வந்த எந்த கட்சியையும் சாராத அமைதி போராட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடாத்தியதை தொடர்ந்து நாடெங்கும் பரவிய வன்முறைகள் காரணமாக 9 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

மேலும் 250 பேர் காயமடைந்து சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 232 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

உயிரிழந்த 9 பேரில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும், பிரதேச சபை தலைவர் ஒருவரும் உள்ளடங்குவதுடன் உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் உள்ளடங்குகின்றனர்.

அத்துடன் இந்த வன்முறைகளால், 88 வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அதில் 47 வாகங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. ஆளும்கட்சி உறுப்பினர்களின் வீடுகள் உள்ளிட்ட 103 வீடுகள், கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதில் 38 வீடுகள் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கேசரியிடம் தெரிவித்தார்.

இன்றும் சொத்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்த நிலையில், இன்று நன்பகல் 12.00 மனி வரையிலான காலப்பகுதி வரையில் பதிவான தகவல்கள் பிரகாரம் இந்த சேதங்கள் தொடர்பில் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. சேத விபரங்கள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந் நிலையில் பொது சொத்துக்கள் அல்லது தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்துமாறு முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு இதனை இன்று (10) உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

மரணங்கள்

வன்முறைகள் காரணமாக ஏற்பட்ட மரணங்கள் மேல் மாகாணத்திலும் தென் மாகாணத்திலும் பதிவாகியுள்ளன. மேல் மாகாணத்தில் 6 மரணங்களும் தென் மாகணத்தில் மூன்று மரணங்களும் பதிவாகியுள்ளன.

தென் மாகாணத்தின் வீரகெட்டிய பகுதியில் முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் நேற்று (9) இரவு இருவர் உயிரிழந்துள்ளனர். இதன்போது மேலும் 8 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

வீரகெட்டிய பொலிஸாரின் தகவல்கள் பிரகாரம், வீரகெட்டிய பிரதேச சபை தலைவரின் வீட்டின் முன்பாக இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.

அத்துடன் இமதுவ பிரதேச சபை தலைவர் ஏ.வி. சரத் குமாரவின் வீட்டின் மீதான தாக்குதலின் போது அவரும் உயிரிழந்துள்ளார்.

மேல் மாகாணத்தில் உயிரிழந்த ஆறு பேரில் இருவர் பொலிசாராவார். அலரி மாளிகை பின் பக்க நுழைவாயில் அருகே, நேற்று 9 ஆம் திகதி இரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுத் தாக்குதல் முன்னெடுக்க முயன்ற 24 வயதான பொலிஸ் கலகத் தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கி வெடித்து அவர் உயிரிழந்துள்ளார்.

இதனைவிட மற்றொரு தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் சார்ஜன் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் நிட்டம்புவ நகரில் ஆர்ப்பாட்டம் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் தொடர்ந்து இருக்குமாறு கூறி முன்னெடுக்கப்பட்ட ஆதரவு வன்முறைகளைத் தொடர்ந்து, வீடு திரும்பிக்கொண்டிருந்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள நிட்டம்புவயில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் இடையே சிக்கி உயிரிழந்துள்ளார்.

அவரது சாரதியும் உயிரிழந்த நிலையில், அச்சம்பவத்தின் போது பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாவர்கள் முன்னெடுத்ததாக கூறும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

இதனிடையே நீர் கொழும்பு பகுதியில் ஹோட்டல் ஒன்றின் மீது தாக்குத்ல் நடாத்தப்பட்ட சம்பவம் மற்றும் அது சார் வன் முறைகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

படுகாயம்

இவ்வாறான நிலையிலேயே காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறும் 232 பேரில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெறுவதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

அந்த 5 பேரில் இரு அருட் தந்தையினரும் இரு பொலிசாரும் ஒரு அமைதி ஆர்ப்பாட்டக் காரரும் உள்ளடங்குகின்றனர்.

சொத்து சேதங்கள்

வன்முறைகள் காரணமாக அதிக சொத்து சேதங்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளன. மேல் மாகாணத்தில் 29 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதுடன் 15 வாகனங்கள் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. 8 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் 23 வீடுகள் இம்மாகாணத்தில் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

தென் மாகாணத்தில் 7 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு 9 வீடுகள் அடித்துடைக்கப்பட்டுள்ளன. அங்கு 5 வாகனங்கள் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளன.

மத்திய மாகாணத்தில் 4 வாகனங்களும் 6 வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் 5 வீடுகள் அடித்துடைக்கப்பட்டுள்ளன.

சப்ரகமுவ மாகாணத்தில் 9 வாகனங்களும் 8 வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. அங்கு இரு வாகனங்கள் 7 வீடுகள் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளன.

வடமத்திய மாகாணத்தில் 3 வாகனங்களும் 4 வீடுகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. வட மேல் மாகாணத்தில் 5 வாகனங்களும் 9 வீடுகளும் தீவைத்து முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன், 13 வாகனங்களும் 15 வீடுகளும் வீடுகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

கிழக்கில் 3 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஊவா மாகாணத்தில் 2 வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் வடக்கில் எந்த வன்முறை சம்பவ சேதங்களும் பதிவாகவில்லை என பொலிஸார் கூறினர்.

தற்போதைய நிலை

இந் நிலையில், இன்றைய தினம் ஊரடங்கு நாடெங்கும் அமுல் செய்யப்பட்டிருந்த நிலையில், பெரிதாக வன்முறை சம்பவங்கள் பதிவாகவில்லை. நாட்டின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, நாடெங்கும் இராணுவத்தினர் பாதைகளில் பாதுகாப்பு கடமைகளில் சேவையில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டு அழிக்கப்பட்ட கோட்டா கோ கம அமைதி ஆர்ப்பாட்டக் களமும் இன்று வழமைக்கு திரும்பி, ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தமையை அவதானிக்க முடிந்தது.

Photo - Thilina Kaluthotage

















SHARE