மத்திய வங்கிக்கு அரசாங்கம் முழு ஒத்துழைப்பு வழங்கும்: ஜனாதிபதி தெரிவிப்பு..!!!
மத்திய வங்கியின் கடமைகள் சுதந்திரமாக நிறைவேற்றப்படுவதற்கு அரசாங்கம் தமது முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதிக்குழுவின் உறுப்பினர் சஞ்ஜீவ ஜயவர்தன உள்ளிட்டோருடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் நேற்று (28) முற்பகல் இடம்பெற்றது.
நிதி நெருக்கடியை குறுகிய காலத்தில் கட்டுப்படுத்தவும் சிறந்த நிலைக்கு கொண்டுவரவும் மத்திய வங்கி ஆளுநர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை ஜனாதிபதி இதன்போது பாராட்டியுள்ளார்.
இதனிடையே, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களின் ஆலோசனைகள் மற்றும் பொருளியல்துறை நிபுணர்களின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் செயற்றிட்டம் தொடர்பிலும் மத்திய வங்கியின் ஆளுநரால் தௌிவுபடுத்தப்பட்டுள்ளது.
எந்தவொரு அரசியல் தலையீடும் இன்றி இந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் உதவுமென இதன்போது ஜனாதிபதி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதன் மூலம் சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியுமென மத்திய வங்கியின் ஆளுநர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.
நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட நிதிக்குழுவினர், சர்வதேச ரீதியில் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை வெற்றியடையச் செய்வதற்கு அரச தலைவர் என்ற ரீதியில் தேவையான விடயங்களை முன்னெடுக்க, தலையீடுகளை மேற்கொள்ள தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதன்போது கூறியுள்ளார்.