தமிழ் தெலுங்கு, இந்திமொழிகளில் திரைப்படங்களை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ்.
விஜய் நடிப்பில் துப்பாக்கி, கத்தி, சர்க்கார் படங்களை இயக்கியவர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தையும் இயக்கினார். சர்க்கார் படத்தின் கதை பஞ்சாயத்தில் முருகதாஸ் நீதிமன்றம் வரை சென்று சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழில் தொடர்ச்சியாக முன்னணி நடிகர்கள் இவரது இயக்கத்தில் நடிக்க தயக்கம் காட்டியதால் மீண்டும் விஜய் நடிக்கும் படத்தை இயக்க கதை சொன்னார். அவர் சொன்ன கதை விஜய்க்கு திருப்தி இல்லாததால் அந்த படம் தொடரவில்லை.
இந்த நிலையில் சிறிய இடைவெளிக்கு பின் 1947 ஆகஸ்ட் 16 என்ற தலைப்பில் ஒரு படத்தை தயாரிக்கிறார். வரலாற்று பின்னணி கொண்ட கதையில் உருவாகி வரும் இந்தப்படத்தில் கவுதம் கார்த்திக், குக் வித் கோமாளி புகழ் உள்பட பலர் நடிக்கின்றனர். புதுமுகம் ரேவதி நாயகியாக நடிக்க, முருகதாஸிடம் நீண்ட காலமாக இணை இயக்குநராக இருந்த என்.எஸ்.பொன்குமார் இந்த படத்தை இயக்குகிறார்.
இந்திய சுதந்திர போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டிய போது, ஒரு கிராமத்தில் ஒரு துணிச்சலான வீரன் பிரிட்டிஷ் படைகளுடன் போரிடும் கதையைச் சொல்கிறது.
படம் பற்றி முருகதாஸ் கூறுகையில், “ '1947- ஆகஸ்ட் 16’ இதயத்தை தொடும் ஒரு நேர்மையான கதை. மனதை அசைத்து பார்க்கும் அற்புதமான படைப்பு. இந்த கதையை உருவாக்க வேண்டிய கட்டாயத்தை கதையே ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை நீங்கள் ஒருமுறை பார்த்தால் என்றென்றும் அது உங்கள் மனதில் நிலைத்து இருக்கும்” என்று கூறியுள்ளார்.
இயக்குனர் பொன்குமார் கூறுகையில், “இது சுதந்திரப் போராட்டக் கதையல்ல, 'சுதந்திரம் என்றால் என்ன' என்பதை புரிந்து கொள்ளும் அப்பாவி கிராம மக்கள் கூட்டம் பற்றிய கதை. அவர்களில் ஒருவர் தான் கதாநாயகன், எப்பொழுதும் ஆக்ரோஷமும் கோபமும் கொண்டவர், ஏங்கும் இதயம் கொண்ட கதாநாயகி, தங்கள் பிரச்சனைகளைப் பற்றி ஏளனமாகச் சிரிப்பவர்கள், மற்றும் காதலிக்கும் வயதான தம்பதிகள் இந்த கதையின் கதாபாத்திரங்கள் இந்தக் கதாப்பாத்திரங்களைச் சுற்றிச் சுழலும் என்றார்.
இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டரை சிவகார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ளார்.
Tags:
cinema news