தேவாலயத்திற்குள் துப்பாக்கிப் பிரயோகம் சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட 50 பேர் பலி - நைஜீரியாவில் சம்பவம்..!!!


நைஜீரியாவில் கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட 50 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஓவோ நகரில் செயின்ட் பிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது திடீரென அங்கு நுழைந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டனர்.

இந்த தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிதாரிகள் தேவாலயத்திற்கு வெளியேயும் உள்ளேயும் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக ஓண்டோ மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட மிகப்பெரிய படுகொலை என்று, ஒண்டோ மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடந்த இடத்தையும், காயமடைந்தவர்களையும் அவர் பார்வையிட்டார். தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும், அவர்களது நோக்கம் உடனடியாகத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் இந்த தாக்குதலில் தேவாலய பாதிரியார் மற்றும் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் காயமின்றி உயிர் பிழைத்தனர்.

தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நைஜீரிய ஜனாதிபதி முஹம்மது புஹாரி கண்டனம் தெரிவித்துள்ளதுடன் இது கொடூரமானது எனவும் குறிப்பிட்டார்.
Previous Post Next Post


Put your ad code here