Sunday 26 June 2022

நாளை முதல் ஆசிரியர்கள் அதிபர்கள் பாடசாலைக்குச் செல்ல மாட்டோம் – இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவிப்பு..!!!

SHARE

நாளை(27) திங்கள் முதல் ஆசிரியர்கள் அதிபர்கள் பாடசாலைக்குச் செல்ல மாட்டோம் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், நாளை பாடசாலைகள் ஆரம்பமாகும் போது எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது .அது இலங்கையின் அனைத்துப் பாடசாலைகளையும் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்களை குழப்புகின்ற அரசியலாகவே இருக்கின்றது. அதாவது நகர்ப்புற பாடசாலைகள் மூன்று நாட்களும் கிராமப்புற பாடசாலைகள் ஐந்து நாட்களும் நடைபெற வேண்டும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது

இது ஒரு வேடிக்கையான விடயம் கிராமப்புறங்களில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக நகரங்களிலிருந்து செல்கின்றவர்கள். அவர்களுக்கு செல்வதற்கான போக்குவரத்து மார்க்கங்கள் எதுவுமே இங்கில்லை. பொதுப் போக்குவரத்து பேருந்துகள் கூட அந்த ஆசிரியர்களை ஏற்றிச்செல்ல மறுக்கின்றன அவர்கள் தனியாகச் செல்வதற்கு எரிபொருள் இல்லை.

இந்த நிலையில் அவர்களை பாடசாலைக்குச் சென்று மாணவர்களுக்கு கற்பியுங்கள் என்று கூறுவது உண்மையில் மோசமான ஒரு அறிவிப்பு. நாங்கள் பிள்ளைகளுடைய கல்வியில் அக்கறையாக இருக்கின்றோம். எத்தகைய பயங்கரமான சூழ்நிலைகளிலும் அவர்களுக்கு கல்வியூட்டியவர்கள் நாங்கள். ஆனால் இன்று ஏற்பட்டிருக்கின்ற இந்த சூழலில் ஒட்டுமொத்த மக்களையும் இன்று வீதிகளில் வரிசைகளில் வைத்திருக்கின்றது இந்த அரசாங்கம்.

இந்த சூழ்நிலையில் மாணவர்களுக்கு கற்பிக்க கூடிய மனநிலையில் ஆசிரியர்களோ அல்லது கற்கக்கூடிய மனநிலையில் மாணவர்களோ இல்லை என்பதனை அரசாங்கம் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

விசேடமாக அன்றாட வாழ்க்கைக்கு அன்றாட உணவுக்கே வழி இல்லாமல் மக்கள் அவதி படுகின்றபோது அந்த அவஸ்தைக்கு மாற்றீடாக மாணவர்களுக்கு மதிய போசனத்தை கொடுங்கள். ஆசிரியர்களுக்கு அதிபர்கள் மாணவர்களுக்கு பொதுப்போக்குவரத்தை இலவசமாக்குங்கள் என்று பல்வேறு விதமான கோரிக்கைகளை முன்வைத்தபோதுஅரசாங்கம் எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை.

மாறாக தாங்கள் எடுத்த கொள்கையிலிருந்து மாறாது பாடசாலைகளில் 3 நாட்கள் 5நாட்கள் நடத்துங்கள் என்று சொல்லுவது வேதனையளிக்கின்றது

எரிபொருளுக்காக தீர்வு கிடைக்கும் வரை நாளை திங்கள் முதல் நாங்கள் யாருமே பாடசாலைக்குச் செல்ல மாட்டோம் இது உறுதியான அறிவிப்பு.

இதனை மத்திய கல்வி அமைச்சருக்கும் கல்வி அமைச்சருடைய செயலாளருக்கும் மாகாணங்களின் கல்வி அமைச்சு செயலாளர்களுக்கும் மாகாணங்களின்

பணிப்பாளர்களுக்கும் வலயங்களின் பணிப்பாளர்களுக்கு நாங்கள் தெளிவாக அறிவித்திருக்கின்றோம்.

ஆகவே இந்த அறிவித்தலை மாகாண செயலாளர்கள் மாகாண பணிப்பாளர்கள் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அதிபர்கள் கூட புரிந்துகொண்டு நடக்க வேண்டும்.

மதிக்கப்பட வேண்டிய கௌரவப்படுத்த வேண்டிய ஆசிரியர்கள் வரிசைகளில் காத்திருந்து பலருடைய சிக்கலுக்கு உட்பட்டு அவமானப்பட்டு வீடுகளுக்குத் திரும்பிச் செல்கின்றனர். எனவே நாளை திங்கட்கிழமை முதல் பெற்றோர்கள் தமது மாணவர்களை வீடுகளில் வைத்திருந்து இந்த அரசாங்கத்திற்கு சமாதி நிலையை எடுத்துக் காட்ட வேண்டிய எதிர்ப்பாக காணப்படுகின்றது. அதற்காக நாங்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டம் செய்யவோ அவ்வாறான நடவடிக்கைகளில் இறங்க கூடாது நாங்கள் படித்த சமூகம் கல்வி சமூகம் உங்களுடைய குழந்தைகளை நாங்கள் வழிப்படுத்துபவர்கள் எங்களுடைய ஆதங்கத்தை அரசாங்கத்திற்கு இந்த சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்தி நாளை திங்கட்கிழமை முதல் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் எவருமே பாடசாலைக்குச் செல்லாது வீட்டிலிருந்து அல்லது எங்களுடைய அத்தியாவசிய தேவை நிமித்தம் அந்தத் தேவைகளை நிறைவு செய்வதற்கான பணிகளை ஈடுபடுவோம் என உங்களை கேட்டுக்கொள்கிறோம் என்றுள்ளது.
SHARE