Sunday 25 September 2022

தியாக தீபத்தை நினைவு கூர்ந்து அடையாள உண்ணாவிரதம்..!!!

SHARE

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில், நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் அடையாள உண்ணாவிரதம் காலை 08 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

தியாக தீபத்தின் நினைவேந்தல்கள் நடைபெற்று வரும் நிலையில் நாளை திங்கட்கிழமை இறுதி நாள் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் இன்றைய தினம் அடையாள உண்ணாவிரத்தில் பலர் கலந்து கொண்டு உண்ணா நோன்பு இருக்கின்றார்கள்.

அதேவேளை நாளை திங்கட்கிழமை பல பாகங்களில் இருந்தும் ஊர்திகள் பவனிவர இருக்கின்றன. அனைத்து ஊர்திகளும் காலை 10 மணிக்கு முன்பதாக நல்லூர் தியாக தீபம் திலீபனுடைய நினைவாலயத்தை வந்தடையும். தியாக தீபம் திலீபனின் உயிர் பிரிந்த 10.48 மணிக்கு மலரஞ்சலி இடம்பெறவிருக்கின்றது. இதன்போதும் மக்கள் பெரும் எழுச்சியாக வரவேண்டும். வாகன ஊர்திகள், தூக்குகாவடிகளை எங்கள் உறவுகள் காலையில் இருந்து அவற்றை கொண்டு வரலாம்.

தியாக தீபம் திலீபன் பிறந்த ஊரெழுவிலிருந்து ஊர்தி நல்லூர் நினைவாலயத்தை நோக்கி வந்தடைய இருக்கின்றது. இந்த ஊர்திகளுடன் இணைந்து பயணித்துக் கொண்டு பொதுமக்கள் வரவேண்டும் என நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.




SHARE