எஹெட் (AHEAD - Accelerating Higher Education Expansion and Development) செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக கழகத்தினால் முன்னெடுக்கப்படும் “வடக்கு மாகாணத்தில் நீர்வளப் பாதுகாப்பு - Water Security in Northern Province (WASPAR)” என்ற ஆய்வரங்கும், “வடக்கின் நீருக்கான உரையாடல் மன்றம் - NORTHERN WATER DIALOGUE FORUM” என்ற கருத்துரைப்பு அரங்கும் கடந்த திங்கட் கிழமையும் ( 21 .11.2022 ) செவ்வாய்க்கிழமையும் (22 .11.2022) யாழ்ப்பாணப் பல்கலைக கழக மருத்துவ பீட மாநாட்டு மண்டபத்தில் முழு நாள் நிகழ்வாக நடைபெற்றது.
2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் நீர்வளப் பாதுகாப்பு செயற்றிட்டத்தின் நடுவழி அறிக்கையிடலாக இடம் பெற்ற இந்த ஆய்வு மாநாட்டில் வடமாகாணத்தின் நல்லூர், கோப்பாய் மற்றும் அக்கராயன் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி 13 ஆய்வு முன்வைப்புகள் சமர்ப்பிக்கப்பட்டன.
முதலாம் நாள் அரங்கில் நீர் வள முகாமைத்துவத்துடன் செயற்படுகின்ற அரச நிறுவனங்கள் மற்றும் ஆய்வின் செயற்பாட்டு குழுக்கள் மூலமாக சேகரிக்கப்பட்ட ஆய்வுத் தரவின் அடிப்படையில் , பல்கலைக்கழகத்தின் கல்வியியலாளர்கள் - ஆய்வாளர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் நிலைமைகள் பற்றி ஆய்வரங்கில் முன்வைக்கப்பட்டதுடன், பங்கெடுப்பு ஆய்வின் கண்டுபிடிப்புக்கள் மற்றும் நீர் வளத்துடன் தொடர்புபட்ட அதிகாரம் மிக்க தரப்புகளுடனான கலந்துரையாடல்கள், திறவுரைகளும் இடம்பெற்றன.
கடந்த 22.11.2022 அன்று செவ்வாய்க்கிழமை இரண்டாம் நாள் அரங்கில் நீர் வள முகாமைத்துவத்துடன் செயற்படுகின்ற அரச நிறுவனங்கள், ஆய்வு நடவடிக்கைக்கு தன்னார்வத்துடன் ஒத்துழைப்பு வழங்கும் குழுக்கள் - பொது மக்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு இடையிலான “வடக்கின் நீருக்கான உரையாடல் மன்றம்” என்ற கருத்துரைப்பு அரங்கும் அரங்கச் செயற்பாட்டுக் குழு மற்றும் பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தின் " பாடலும் பறைதலும் " அரங்க ஆற்றுகையும் இடம்பெற்றன. நீர்த் திட்டத்தில் செயற்படும் குழுக்கள் உற்சாக மனநிலையுடன் தொடர்ந்தும் இச் செயற்பாட்டில் ஈடுபடும் சக்தியாக அரங்க ஆற்றுகை இடம்பெற்றது.
யாழ்.தர்மினி