கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையினுடைய ஏற்பாட்டில், ஆனையிறவு தட்டுவன்கொட்டி சந்தியில் நடராஜர் பணிக் குழுவினால் நிர்மாணிக்கப்பட்ட 27 அடி உயரமான நடராஜர் சிலை 12.03.2023 அன்று பிரதிஸ்டை செய்து வைக்கப்பட்டது.
கரைச்சி பிரதேச சபையின் கீழுள்ள ஆனையிறவு பகுதியில் பிரதான வர்த்தக மையம், பாரம்பரிய உணவகம், எரிபொருள் நிலையம், நவீன குளியலறை, விளையாட்டு முற்றம் மற்றும் கடற்கரை உல்லாச விடுதி, வங்கி வசதிகள் என்பவற்றுடன் கூடிய ஆனையிறவு வணிக சுற்றுலா மையத்தை நிறுவும் மூல திட்டமிடல் வரைபடத்தின் அடிப்படையில், முதலாம் கட்ட பணிகள் நிறைவுபெற்று அங்கு நிறுவப்பெற்ற சுமார் 27 அடி உயரமான நடராஜ பெருமானின் குடமுழுக்குப் பெருவிழா இடம்பெற்றது.
குறித்த குடமுழுக்கு விழாவில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், சமயத் தலைவர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.