
யாழ் மாவட்டத்தில் 41 ஆயிரத்து 556 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 35 ஆயிரத்து 963 பேர் இதுவரை மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் புதன்கிழமை யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தை பொறுத்தவரை 1639 குடும்பங்களை சேர்ந்த சுமார் 4737 பேரை மட்டும் மீள்குடியேற்றப்பட வேண்டிய தேவை உள்ளது.
அதற்கான சகல வேலை திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வீடமைப்பு அதிகார சபையினால் ஜனாதிபதியின் பணிபுரைக்கு அமைய வட மாகாண ஆளுநரால் வீட்டு திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.
மேலும் யாழ் மாவட்டத்தில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினரிடமிருந்த காணிகளை மக்களின் மீள்குடியேற்றம் விவசாய நடவடிக்கைக்காக விடுவிக்கும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதற்காக சகல மட்டங்களிலும் கலந்துரையாடல்களிடம் பெற்று தீர்க்க வேண்டிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுவதுடன் தீர்க்க முடியாத விடயங்களை ஜனாதிபதியின் விசேட மட்டத்துக்கு அடுத்த செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.