Tuesday 27 February 2024

வடமாகாணத்தினுள் நாளை முதல் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபட மாட்டாது..!!!

SHARE

முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் நாளை முதல் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களுக்கிடையேயான தனியார் போக்கு வரத்து சேவைகள் இடம்பெறாது என வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தலைவர் சி.சிவபரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவின் அழைப்பினை அடுத்து யாழ் மாவட்ட தூர சேவைச் சங்கத்தின் பேருந்து உரிமையாளர்களும், ஏனைய மாவட்ட சங்கப் பிரதிநிதிகளும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மின்சார நிலைய வீதித் தரிப்பிடத்திற்கு சென்ற போது, அமைச்சர் எமது தரிப்பிடம் யாழ் போதனா வைத்திய சாலையின் சேவைகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் அதனால் சேவையில் ஈடுபடுவதற்காக நிற்கும் பேருந்துக்களை அவ்விடத்தில் தரித்து நிற்க வேண்டாம் என பொலிசாரின் முன்னிலையில் கூறி அவ்விடத்தில் வாகனங்கள் நிறுத்தக் கூடாது என்ற அறிவிப்பு பலகையும் வைத்துள்ளனர்.

இந் நிலையில் ஐந்து மாவட்டச் சங்கங்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து மீண்டும் அமைச்சருடன் கலந்துரையாடி எமது தரிப்பு நிலையத்தில் இருந்து சேவைகளை ஆற்ற முடியாத நிலையினை தெரிவிக்கும் முயற்சிகள் பலனளிக்காத காரணத்தினால் தூரசேவைகளுக்கான தனியார் போக்குவரத்துச் சேவைகளும், இலங்கை போக்குவரத்துச் சபையின் தூரசேவைகளும் இணைந்து புதிய தரிப்பிடத்தில் இணைந்து சேவைகளில் ஈடுபடும் சூழ்நிலை உருவாகும் வரை வட மாகாணத்திற்குள்ளான அனைத்து தனியார் போக்குவரத்து சேவைகளும் நடைபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பததை அறியத்தருகின்றோம் என்றனர்.
SHARE