வலி. வடக்கு காணிகள் தொடர்பில் ஜனாதிபதி கவனம்..!!!


வலி வடக்கு பிரதேசத்தில் உள்ள காணிகள் விடுவிப்பு சம்பந்தமாக ஏற்கனவே ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை பொது அமைப்புக்களால் ஒழுங்கு படுத்தப்பட்ட பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றிருந்தது .

அக்கூட்டத்தில் இராணுவ வசமுள்ள காணிகள் விடுவிப்பு மற்றும் மீள்குடி யேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அதன் போது, காணி தொடர்பாகவும் மீள்குடியேற்றம் தொடர்பாகவும் பல கோரிக்கைகளை முன் வைத்து பலர் தமது மன ஆதங்கங்களையும் வேதனைகளையும் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவ‌ட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரமிடம் வெளிப்படையாக தெரிவித்திருந்தனர்.

அதன் போது கருத்து தெரிவித்திருந்த சந்திரசேகர், வலி வடக்கு பிரதேசத்தில் உள்ள காணிகள் விடுவிப்பு சம்பந்தமாக ஏற்கனவே ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன் அது தொடர்பான விவரங்களையும் கோரியுள்ளார்.

எனவே வலி வடக்கு பிரதேசத்தில் உள்ள இராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள காணிகள் பெரும்பாலானவற்றை விடுவித்து தருவதாக அங்கு கூடியிருந்த பொது அமைப்புக்கள் மற்றும் மக்களிடம் உறுதிமொழி அளித்தார்.


Previous Post Next Post


Put your ad code here