தோல்வியடைந்த பிரபலத் தமிழ் அரசியல்வாதிகள்..!!!


நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களுடைய ஆசனங்களை இழந்துள்ளனர்.

இதன்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் தோல்வியடைந்துள்ளார்.

ப்ளொட் இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன் யாழ்ப்பாண மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார்.

அத்துடன் கடந்த 2020ம் ஆண்டு பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்ற அங்கஜன் ராமநாதன் இம்முறை தோல்வியடைந்தார்.

கடந்த முறை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி இருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்தார்.

ஈபிடிபியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா இம்முறை பொதுத் தேர்தலில் தோல்வியுற்றதுடன், அவர் முதன்முறையாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகத் தவறியுள்ளார்.

வன்னி மாவட்டத்தில் கடந்த தடவை ஈபிடிபி சார்பாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவான குலசிங்கம் திலீபன் இம்முறை தேர்தலில் தோல்வியுற்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பாகக் கடந்த தடவை நாடாளுமன்றத்துக்குத் தெரிவான பிள்ளையான் என அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் இம்முறை தேர்தலில் தோல்வியுற்றார்.

அத்துடன் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டுக் கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகி இம்முறை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் மட்டக்களப்பில் போட்டியிட்ட கோவிந்தம் கருணாகரன் தோல்வியுற்றார்.

பதுளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கடந்த முறை பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அருணாச்சலம் அரவிந்த்குமார் மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோர் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்தனர்.

விருப்பு வாக்குகள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் இருக்கின்ற நிலையில், இந்த பகுதி புதியத் தகவல்களுடன் தொடர்ந்து புதுப்பிக்கப்படும்.

sooriyanfmnews
Previous Post Next Post


Put your ad code here