வட்டுக்கோட்டை விபத்தில் சிக்கிய இளம் குடும்பஸ்தர் வைத்தியசாலையில் உயிரிழப்பு - பெண் வைத்தியர் விளக்கமறியலில்..!!!



வட்டுக்கோட்டை பகுதியில் கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம்(20.11.2024) உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர், அராலி மத்தி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் என்பதோடு இரண்டு பிள்ளைகளின் தந்தையும் ஆவார்.

பெண் வைத்தியர் ஒருவரின் காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

இவ்விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதியான பெண் வைத்தியர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, கைதான வைத்தியர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டவேளை, அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
Previous Post Next Post


Put your ad code here