யாழ் போதனா வைத்தியசாலையில் இரண்டாம் நாளாக தொடரும் பணிப்புறக்கணிப்பு..!!!



யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தமது தொழிற்சங்க நடவடிக்கையை இன்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுத்து வருகின்றனர்.

இதனால் நோயாளர்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் நோயாளர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டுமெனவும் பலரும் கோரியுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவசர சிகிச்சை தவிர்ந்த ஏனைய சிகிச்சைகளை இடைநிறுத்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நேற்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனால் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாவதுடன் உரிய சிகிச்சைகளை பெறமுடியாது பெரும் அவதியை எதிர்நோக்கியுள்ளனர்.

இவ்வாறு வைத்தியர்கள் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்ற தொழிற்சங்க நடவடிக்கையினால் நோயாளர்கள் பெரும் ஆபத்தையும் எதிர்நோக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

எனவே நோயாளர்களின் நலனைக் கருத்திற்கெண்டு அவர்களைப் பாதிக்காத வகையில் வைத்தியர்கள் செயற்பட வேண்டுமென கேட்டுள்ள பொதுமக்கள், நோயாளிகளுக்கான சிகிச்சைகளை நிறுத்தாது வழமைபோன்று வழங்குவதற்கு வைத்தியர்கள் முன்வர வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறான நிலைமையில் இப் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும் இடையில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் உரிய தீர்வுகள் எட்டப்படலாமெனவும் தெரிய வருகின்றது.
Previous Post Next Post


Put your ad code here