வடக்கு காணிகள் குறித்த வர்த்தமானி இடைநிறுத்தம்..!!!


தனியார் காணிகளை அரசுடமையாக்கும் அல்லது கையகப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது. நில அளவை வரைபடப் பகுதிக்குள் உள்ள காணிகளின் உரிமை தனியாருக்குச் சொந்தமானதா அல்லது அரசுக்கு சொந்தமானதா என்பதைத் தனித்தனியாக அடையாளம் காணவே தீர்மானிக்கப்பட்டது.

இதனூடாக காணிப் பிரச்சினைகளை இதன்மூலம் முறையாக தீர்த்துக் கொள்ள முடியும். தீவின் அனைத்து மாகாணங்களிலும் காணி தீர்வுக்கான பூர்வாங்க அறிவிப்புக்களை வெளியிடுவதன் மூலம் நில தீர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வடக்கு மாகாணத்துக்கு மாத்திரம் விசேடமான முறையில் குறிப்பிட்ட தீர்வுக்கான பூர்வாங்க அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை என கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசன அமைச்சு அறிவித்துள்ளது.

1921 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் 2025.03.28 ஆம் திகதியன்று பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வெளியிடப்பட்ட தீர்வுக்கான ஆரம்ப அறிவிப்புகள் தொடர்பான சமூகத்தில் எழுந்துள்ள தவறான கருத்துக்கள் மற்றும் தவறான புரிதல்கள் நீங்கும் வரை, குறித்த வரைபடப் பகுதிகளில் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என காணி அமைச்சு அறிவித்துள்ளது.

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசன அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2025.03.28 ஆம் திகதியன்று பிரசுரிக்கப்பட்ட 2430 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் 1921 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் மூலம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் அளந்து தயாரிக்கப்பட்ட 07 நில அளவை கிராம வரைபடங்கள் தொடர்பாக ,07 நிர்ணய அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த அறிவித்தல்கள் மேற்கூறப்பட்டுள்ள கட்டளைச் சட்டத்தின் 04ஆம் பிரிவு மற்றும் 01 ஆம் உப பிரிவின் கீழ் பிரத்தியேகமாக குறிப்பிடப்பட்டுள்ள காணி கட்டளைகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்டுள்ளன.குறித்த பகுதிகளில் காணிகளின் உரிமையை தீர்த்து வைப்பதற்காக மட்டுமே விளம்பரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், எந்த வகையிலும் காணிகளை அரசுடமையாக்கும் அல்லது கையகப்படுத்தும் விளம்பரங்கள் ஏதும் தயாரிக்கப்படவில்லை.

தீர்வுக்கான ஆரம்ப அறிவிப்பு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதன் பின்னர், அதில் குறிப்பிடப்பட்டுளள்ள நிலப்பதிகளுக்கு ஏதேனும் உரிமைகள் உள்ள தரப்பினர் மூன்று மாதங்களுக்குள் தங்களின் உரிமைகள் அல்லது உரிமைக் கோரல்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.அவ்வாறு சம்பந்தப்பட்ட உரிமைக்கோரல்களை ஆய்வு செய்த பின்னர் உரிய காணித் துண்டுகளை களத்துக்குச் சென்று ஆய்வு செய்து, காணிகளை அளந்து ஒதுக்கீடு செய்ததன் பின்னர், உரிமைக்கோருபவர்களுக்கு உரிய முறையில் தீர்த்து வைக்கப்படும்.

அவ்வாறு தனிப்பட்ட முறையில் தீர்த்து வைக்கப்படுகின்றன நிலங்கள் முறையாக காணிப்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டு, இறுதி தீர்வு உத்தரவு வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்படுவதன் மூலம், ஒவ்வொரு நிலத்தின் உரிமையும் தனியாருக்குரியதா அல்லது அரசுக்குரியதா என்பது அறிவிக்கப்படும்.

நிலத்தின் உரிமையாளர் எவரேனும் வெளிநாட்டில் வசித்தால் அவர் முறையாக அங்கீகரிக்கப்பட்ட சட்டத்தரணி மூலமாகவும் தனது கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம். உரிமைகோரல்களைச் சமர்ப்பிப்பதற்குச் சட்டம் மூன்று மாத காலவகாசம் வழங்கினாலும், 1996 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் கீழ்,இறுதி தீர்வு உத்தரவு வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்படும் வரை சமர்ப்பிக்கப்பட்ட உரிமைக்கோரல்களை ஏற்றுக்கொள்ளலாம் என்ற சிறப்பு ஏற்பாடு உள்ளது.இது நில உரிமையாளர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்வைக்க ஒரு வாய்ப்பை மேலும் வழங்கியுள்ளது.

நில உரிமையாளர் உரிமை கோரலை தாக்கல் செய்யும்போது, அந்த காணி தொடர்பான ஆவணங்கள் மூலமாக மாத்திரம் உரிமை கோரலை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் உரிமை கோரல் விசாரணையின் போது, நிலத்தின் உடைமை, அதனை அனுபவித்தல் மற்றும் நிலத்தினை அபிவிருத்தி செய்திருத்தல் போன்ற அம்சங்களும் கவனத்திற்கொள்ளப்படுவதால், அப்போதைய போர் சூழ்நிலை காரணமாக நிலம் தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்ட அல்லது காணாமல் போன நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களுக்கான உரிமைகளைத் தீர்த்துக் கொள்ள இது ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.

இந்த செயன்முறையின் மூலம் குறித்த வரைபடப் பகுதிக்குள் உள்ள காணிகளின் உரிமை தனியாருக்குச் சொந்தமானதா அல்லது அரசுக்கு சொந்தமானதா என்பதைத் தனித்தனியாக அடையாளம் காண முடியும்.தனிப்பட்ட காணி உரிமையாளருக்கு அரசாங்கம் அவர்களின் காணியின் தெளிவான உரிமையை இதன்மூலம் உறுதிப்படுத்திக் கொடுக்க வாய்ப்பு கிடைக்கின்றனது.

மேலும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் நீண்டகாலமாக நிலவி வருகின்றன காணிப் பிரச்சினைகளை இதன்மூலம் முறையாக தீர்த்துக் கொள்ள முடியும்.அரசுக்குச் சொந்தமான நிலங்களைத் தனித்தனியாக அடையாளம் காண முடிவதன் மூலம் ,முதலீட்டு வாய்ப்புகளுக்கான அணுகலை வழங்குவதோடு, காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டம் மற்றும் அரச காணிக் கட்டளைச் சட்டத்தின்படி நிலமற்ற பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசுக்குச் சொந்தமான காணிகளை வழங்குவதற்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின்படி, 1931 ஆம் ஆண்டு முதல் காணி நிர்ணயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடக்கு மாகாணத்தில் 30 சதவீதம், கிழக்கு மாகாணத்தில் 81 சதவீதம், வடமத்திய மாகாணத்தில் 99 சதவீதம், வடமேல் மாகாணத்தில் 99 சதவீதம், சப்ரகமுவ மாகாணத்தில் 99 சதவீதம்,மத்திய மாகாணத்தில் 99 சதவீதம்,மேல் மாகாணத்தில் 100 சதவீதம்,தென் மாகாணத்தில் 100 சதவீதம், ஊவா மாகாணத்தில் 99 சதவீதம், என்ற அடிப்படையில் காணி நிர்ணயப் பணிகள் நிறைவடைந்தன.

அதன்படி தீவின் அனைத்து மாகாணங்களிலும் மேற்குறிப்பிட்ட சட்டத்தின் பிரகாரம் தீர்வுக்கான பூர்வாங்க அறிவிப்புக்களை வெளியிடுவதன் மூலம் நில தீர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வடக்கு மாகாணத்துக்கு மாத்திரம் விசேடமான முறையில் குறிப்பிட்ட தீர்வுக்கான பூர்வாங்க அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை.

2025.03.28 ஆம் திகதியன்று 1921 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வெளியிடப்பட்ட தீர்வுக்கான ஆரம்ப அறிவிப்புகள் தொடர்பான சமூகத்தில் எழுந்துள்ள தவறான கருத்துக்கள் மற்றும் தவறான புரிதல்கள் நீங்கும் வரை, குறித்த வரைபடப் பகுதிகளில் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here