யாழில், பித்தப்பை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் (27) உயிரிழந்துள்ளார். இவர் நல்லூரைச் சேர்ந்த துஷ்யந்தன் நிரோஷா (வயது 37) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு பித்தப்பை கல் சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்காக கடந்த 22 ஆம் திகதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். பின்னர் 23 ஆம் திகதி பித்தப்பை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் குறித்த பெண் சிலமணி நேரங்களில் மயக்கமடைந்துள்ளார். பின்னர் 25 ஆம் திகதி காலை, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.