செம்மணி மனிதப் புதைகுழியில் குழந்தை உள்ளிட்ட 13 என்புத்தொகுதிகள் அடையாளம்..!!!


யாழ்ப்பாணம் செம்மணி - சித்துப்பாத்தி இந்துமயான மனிதப்புதைகுழியில் இருந்து ஒரு சிசுவின் என்புத்தொகுதி உட்பட இதுவரை 13 என்புத்தொகுதிகள் அவதானிக்கப்பட்டுள்ளன.

இதனால், இந்தப் புதைகுழி மிகப்பெரியதாக இருக்கலாம் என்ற அச்சம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அரியாலை சித்துப்பாத்தி இந்துமயானத்தில், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தற்போது அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுவருகின்றன.

பணிகளின் ஐந்தாம் நாளான நேற்றையதினம் புதன்கிழமை சிறிய என்புத்தொகுதியொன்று அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. முகத்தோற்ற அளவில் அது ஒரு வயதுக்கு உட்பட்ட சிசுவுடையதாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

அத்துடன் இதுவரை 13 என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் ஐந்து தொகுதிகள் முற்றாக மீட்கப்பட்டுள்ளதுடன், ஏனையவற்றை அகழும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுவரும் மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை ஆடைகள் எவையும் மீட்கப்படவில்லை. அத்துடன், வேறு சில என்புச் சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
Previous Post Next Post


Put your ad code here