முடிவிற்கு வரும் போராட்டம் : நேபாளத்தை ஆளப்போகும் முதல் பெண்மணி..!!!


நேபாளத்தின் இடைக்கால பிரதமராக முன்னாள் பிரதம நீதியரசர் சுஷிலா கார்க்கி நியமிக்கப்பட்டுள்ளதுடன் இவர் நேபாளத்தை வழிநடத்தும் முதல் பெண்மணி ஆவார் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இடைக்கால நிர்வாகத்தின் தலைவராக அவர் இன்றிரவு பதவியேற்க உள்ளதாக அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி பௌடெல், இராணுவத் தளபதி அசோக் ராஜ் சிக்டெல் மற்றும் நேபாளத்தின் மிக மோசமான எழுச்சிக்கு தலைமை தாங்கிய போராட்டக்காரர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஜனாதிபதி ராம்சந்திர பௌடெல் அலுவலகம் கார்க்கியின் நியமனத்தை அறிவித்தது.

73 வயதான கார்க்கி, உள்ளூர் நேரப்படி இன்று(12) பதவியேற்பார் என்று ஜனாதிபதி அலுவலகத்தின் தகவல் அதிகாரி அர்ச்சனா கட்கா தெரிவித்தார். அவருடன் மேலும் இரண்டு அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என்று உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

தலைமை நீதிபதியாக பணியாற்றிய ஒரே பெண்மணியான கார்கி, நேர்மை, மற்றும் ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டிற்கான அவரது நற்பெயரை மேற்கோள் காட்டி போராட்டக்காரர்களின் விருப்பமான தேர்வாக இருந்தார்.

2017 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை சுமார் ஒரு வருடம் அவர் உயர் நீதித்துறையில் பதவி வகித்தார்.

26 சமூக வலைத்தளங்களுக்கு அந்த நாட்டில் தடை விதிக்கப்பட்டதை அடுத்து இளைஞர்கள் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

பின்னர் போராட்டம் தீவிரமான நிலையில், நாடாளுமன்றம், அரச கட்டிடங்கள், அரசியல்வாதிகளின் வீடுகள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இந்நிலையில் அந்த நாட்டு பிரதமராக செயற்பட்ட கே.பி சர்மா ஒலி தலைமையிலான அரசாங்கம் பதவி விலகியது. அதன் பின்னர் நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் நேபாள இராணுவத்தினர் அதனை பொறுப்பேற்ற நிலையில், போராட்டங்கள் கைவிடப்பட்டு அந்நாடு இயல்பு நிலைக்கு திரும்பியது.

இந்நிலையிலேயே நேபாளத்திற்கு இடைக்கால பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here