
வடக்கில் உள்ள பாடசாலைகள் சில வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்களிடம் பாடசாலை அபிவிருத்திக்கென நிதியை கேட்பது தொடர்பில் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.
இலங்கையை பொறுத்தவரை இலவச கல்வியே அரசாங்கம் மாணவர்களுக்கு கொடுத்து வருவதுடன், பாடசாலைகளின் அபிவிருத்திகளையும் தேவைக்கு முக்கியத்துவம் அளித்து நிறைவேற்றி வருகின்றது.
வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது. கருத்துத் தெரிவித்த ஆளுநர்,
புதிதாக நியமிக்கப்பட்ட இளம் அதிபர்களின் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கனவாக உள்ளன. அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அடிக்கடி பாடசாலைகளுக்கு களப் பயணம் மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
பாடசாலைகளின் தேவைப்பாடுகளை கண்டறிய வேண்டும். சில பாடசாலைகள் நேரடியாக வெளியாட்களிடம் உதவிகளைக் கேட்கின்றனர். அரசாங்கத்தின் நிதியுதவியில் செய்யக் கூடிய விடயங்களைக்கூட பாடசாலை சமூகம் வெளியாட்களிடம் கேட்பதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
அதேவேளை யாழ் மாவட்டத்தில் உள்ள கிராமபுற சில பாடசாலைகளிற்கு வெளிநாடுகளில் இருபோரிடம் நிதி கேட்பதும், அவர்களை முன்னிலைப்படுத்தி நிகழ்வுகளை நடத்துவது தொடர்பிலும் சமூக வலைத்தளங்களில் விசனங்கள் வெளியிடப்பட்டுள்ளது.