குற்றக் குழுக்களின் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலையில் நேபாளத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ள செவ்வந்தி யாழ்ப்பாணத்திலும் பதுங்கியிருந்தார் என்ற விடயம் தெரியவந்துள்ளது.
செவ்வந்தியிடமும், அவருடன் கைது செய்யப்பட்ட குழுவிடமும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்போதே, இலங்கையில் நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு பிறகு செவ்வந்தி 4 நாட்கள் இலங்கையில் தலைமறைவாகி இருந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.
மித்தெனிய மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலேயே அவர் தலைமறைவாகி இருந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. பின்னர் இந்தியாவுக்கு தப்பிச்சென்று அங்கு மூன்று வாரங்கள் தங்கியிருந்த பின்னரே நேபாளம் சென்றுள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜே.கே.பாய் என்பவரே செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார் என தெரியவருகின்றது. இவர் நிழல் உலக தாதா கெஹேல்பத்தர பத்மேயின் சகாவெனவும் தெரியவருகின்றது.
செவ்வந்தியுடன் இணைந்து அவரும் வெளிநாட்டுக்கு தப்பியோடியுள்ளார். இவர் ஊடாகவே செவ்வந்திக்குரிய பணம் வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகின்றது.
