கொழும்பு மற்றும் அதனை அண்மித்த நகரங்களில் போதைக்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை துரிதமாக அதிகரித்து வருவது குறித்து சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சு பாரிய கவலையை வெளியிட்டுள்ளது.
அண்மைய தகவல்களின் அடிப்படையில், அதிக எண்ணிக்கையிலான இளம் யுவதிகளும் பல்வேறு போதைப் பொருட்களுக்குப் பயங்கரமான விகிதத்தில் அடிமையாவதைக் காட்டுவதாக அமைச்சர் சரோஜா சாவித்திரி பவுல்ராஜ் தெரிவித்துள்ளார்.
காவல்துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவுகள் மற்றும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை ஆகியவற்றின் தரவுகளின்படி, பெண்களிடையே 'ஐஸ்', மாத்திரைகள், மதுபானம் மற்றும் சிகரெட் பாவனையின் பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணிப் பெண்கள் போதைக்கு அடிமையாதல், அவர்களின் குழந்தைகளின் அறிவுசார் மற்றும் உடல் வளர்ச்சிக்கு ஒரு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.
இந்த பிரச்சினையை எதிர்கொள்வதற்கும், தேவையான ஆதரவு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை வழங்குவதற்கும் அமைச்சு ஏற்கனவே ஒரு விசேட வேலைத்திட்டத்தை உருவாக்கத் தொடங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Tags:
sri lanka news
