யாழ்.ஊர்காவற்றுறை, வேலணைப் பகுதிகிளல் திகதி காலாவதியான மற்றும் மனித பாவனைக்கு உகந்ததல்லாத பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் உள்ள கடைகளில் ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில், ஊர்காவற்துறை பொது சுகாதார பரிசோதகர் ரா.சானுஜன் மற்றும் வேலணை பொது சுகாதார பரிசோதகர் சீ.வி.கிசோக்குமார் ஆகியோரடங்கிய குழுவினரால் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது இருகடைகளில் சுகாதாரமற்ற முறையில் களஞ்சியபடுத்தப்பட்ட திகதி காலாவதியான மற்றும் மனித பாவனைக்கு உகந்ததல்லாத பெருமளவிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து இரு கடை உரிமையாளர்களிற்கும் எதிராக தனித்தனியாக 34 குற்றச்சாட்டுக்கள், 13 குற்றச்சாட்டுகளுடன் நேற்று திங்கட்கிழமை ஊர்காவற்றுறை பொது சுகாதார பரிசோதகர் ரா.சானுஜன் இனால் ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
வழக்குகளினை விசாரித்த ஊர்காவற்துறை நீதவான் இரு கடை உரிமையாளர்களையும் குற்றவாளிகளாக இனங்கண்டு முறையே 170,000 ரூபா, 65,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.
அத்துடன் சுகாதார குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு பொது சுகாதார பரிசோதகரின் அறிக்கை கிடைக்கப்பெறும் வரை இரு கடைகளையும் சீல் வைத்து மூடுமாறு கட்டளை இட்டார். இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் ரா.சானுஜன் இனால் இரு கடைகளும் சீல் வைத்து மூடப்பட்டது.
