இந்திரவிழாவில் மோட்டார் சைக்கிள் பாதுகாப்புக்கு 200 ரூபாய் அறவிடப்பட்டவரை வல்வெட்டித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்திர தீர்த்த திருவிழாவை முன்னிட்டு "இந்திரா விழா" நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மிக சிறப்பாக இடம்பெற்றது.
அதன் போது மோட்டார் சைக்கிள் தரிப்பிட கட்டணம் என 200 ரூபாய் எனவும் வாகன தரிப்பிட கட்டணம் 250 ரூபாய் எனவும் தனியார் ஒருவரால் வசூலிக்கப்பட்டு, அதற்கான சிட்டையையும் வழங்கியுள்ளார்.
வல்வெட்டித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட குறித்த பகுதியில் தனியார் ஒருவர் மோட்டார் சைக்கிள் தரிப்பிட கட்டணமாக 200 ரூபாயும் வாகன தரிப்பிட கட்டணமாக 250 ரூபாய் வசூலித்தமை தொடர்பில் நகர சபையினரால் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த வாகன தரிப்பிட உரிமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் , அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதேவேளை இம்முறை இந்திர விழாவிற்கு வாகன தரிப்பிடங்களுக்கு நகர சபையினால் , இடங்கள் ஒதுக்கப்பட்டு, அவற்றை குத்தகைக்கு விடுவதற்காக கேள்வி கோரல்கள் விடுக்கப்பட்ட போதிலும் , ஒருவரும் குத்தகைக்கு எடுக்க முன்வராதமையால் இலவசமாக வாகனங்கள் தரிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது.
எனினும் தனிநபர் ஒருவர் நகர சபையின் எவ்வித அனுமதியின்றி தரிப்பிடக்கட்டணம் அறிவிடப்பட்டமை தொடர்பில் தாம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக நகர சபை உத்தியோகஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்,