பருத்தித்துறையில் உள்ள உணவகம் ஒன்றில் லஞ் சீட் பாவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக ஒரு இலட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகரான ப. தினேஸினால் நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன் போது, அனுமதி பெறாமலும், உணவு வளவுப்பதிவுச்சான்றிதழ் இல்லாமலும், உணவு பொதியிடலுக்கு லஞ்சீற் பயன்படுத்தியமை, உணவுத்தயாரிப்பிற்கு பயன்படும் நீரானது குடிக்கத்தகுந்தது என உறுதி செய்ய தவறியமை, உடல்நலத்தகுதியினை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் உணவினை கையாண்டமை, தனிநபர் சுகாதாரம் பேணாமல் உணவினை கையாண்டமை, மற்றும் வெளிச்சுற்றாடலினால் பாதிக்கப்படகூடியவாறான சூழலில் உணவினை உற்பத்தி செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் கீழ் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
குறித்த வழக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது, உணவக உரிமையாளர் தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து, உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று , ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் விதித்தது.