பல வருடங்களாக இலங்கையில் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் பல நெருக்கடிகளை சந்தித்து வரும் வேளையில், கொரோனா வைரஸ் தொற்று மற்றும் வேலையின்மை காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இவ்வாறு அவதியுறும் 41 அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு இடர் கால நிவாரண உதவிகளை இலண்டனில் இயங்கும் தமிழர் தகவல் நடுவம் (TIC) என்ற அமைப்பு வழங்கியுள்ளது.
இந்த உதவித்திட்டத்தின் அடிப்படையில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னாரில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 33 குடும்பங்களுக்கு தலா 5000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் கடந்த வாரம் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. திருகோணமலை, மட்டக்களப்பு, மாத்தளை, பதுளை மற்றும் கொழும்பு பகுதியில் வசிக்கும் மிகுதி 8 குடும்பங்களுக்கு தலா 5000 ரூபாய் அவரவர் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் பொ.சோபிகாவின் ஏற்பாட்டில் இலண்டனில் உள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளரான கீத் குலசேகரத்தின் நிதி உதவியில், இந்த உதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளன.