மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தில் விழா எடுக்கும் பெரியவர்கள் அனைவரும், யாழ்ப்பாணம், நல்லூர் அரசடிச் சந்திப் பகுதியில் உள்ள பாரதி சிலையின் இன்றைய நிலை பற்றிக் கவனத்தில் எடுத்து அதனை விரைந்து சீர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்று ஆர்வமுள்ள இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை, நல்லூர் அரசடிச் சந்திப் பகுதியில் உள்ள பாரதி சிலை அருகில் மிகவும் கோலாகலமாக மகாகவி பாரதியார் நினைவு தினம் கொண்டாடப்பட்டிருந்தது. அன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர்கள் சிலர், பாரதியார் சிலை சிதிலமடைந்திருப்பதைக் கண்ணுற்றுள்ளனர்.
சிலையிலுள்ள சேதங்களைச் சீர்செய்யாது விட்டால், விரைவில் பாரதியார் சிலை உடைந்து விழும் அபாயம் இருப்பதனால், இந்தியத் துணைத் தூதரகத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிலையைப் புனரமைப்பதற்கு முன்வர வேண்டும் என்று கருத்து வெளியிட்டுள்ளனர்.