யாழ்ப்பாணத்தின் கரையோரப் பகுதியில் வாழும் மக்களை, மிகவும் விழிப்பாக செயற்படுமாறு யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்தார்
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா சமூக தொற்று தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் செனரத் பண்டார மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாண குடாநாடானது பெருமளவு கடல் பிரதேசத்தை கொண்ட ஒரு பிரதேசமாகும்.
நமக்கு அண்மைய நாடான இந்தியாவில் அதிலும் தென்னிந்தியாவில் கொரோனா தொற்று மிகவும் அதிகளவில் காணப்படுகின்றது.
தென்இந்திய மீனவர்களின் வருகையின் காரணமாக வடக்கு பிரதேசத்தில் கொரோனா தொற்றுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது.
எனவே யாழ்ப்பாணக் குடாநாட்டின் கடற்கரையை அண்டியுள்ள பகுதியில் உள்ள மக்கள், இந்த விடயம் தொடர்பில் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.
கடந்த சில நாட்களுக்கு முதல் பருத்துறை பகுதியில் இந்திய மீனவர்களுடன் தொடர்புபட்டவர்களை தனிமைப்படுத்தியுள்ளோம். ஆகவேஅதுபோன்ற சம்பவங்கள் இனியும் இடம்பெறா வண்ணம் பொதுமக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.
வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரைக்கும் யுத்தத்திற்கு முகம் கொடுத்து பல இன்னல்களை அனுபவித்த மக்கள், மீண்டும் கொரோனா தொற்று மூலம் பாதிக்காத வண்ணம் செயற்பட வேண்டியது அனைவரது பொறுப்பாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.