யாழ். பல்கலை. விரிவுரையாளர்கள் விரிவுரை புறக்கணிப்பு அறிவித்தல்..!!!


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை முதல் இடம்பெற்ற சம்பவங்களின் போது, பல்கலைக்கழகத் துணைவேந்தர், விரிவுரையாளர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் தாக்கப்பட்டமையைக் கண்டிக்கும் வகையிலும், தாக்குதலாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் கலைப்பீட விரிவுரையாளர்கள் வகுப்புகளுக்குச் செல்லாமல் புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு முடிவு செய்துள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற விரிவுரையாளர்கள் சந்திப்பொன்றினை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. நண்பகல் 12 மணி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் செல்லாமல் புறக்கணிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர்.

நேற்று வியாழக்கிழமை பல்கலைக்கழக கலைப்பீடத்தில் இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் முற்றிய நிலையில் சமரசப்படுத்த முனைந்த துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, கலைப்பீட விரிவுரையாளர்களான எஸ்.ஜீவசுதன், எஸ். ரமணராஜா மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டிருந்தனர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்தே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கலைப்பீட விரிவுரையாளர்கள் வகுப்புகளுக்குச் செல்ல மறுத்துள்ளனர்.

இந்நிலையில், இன்று மாலை இடம்பெறவுள்ள சிறப்புப் பேரவைக் கூட்டத்தில் நேற்றைய சம்பவம் குறித்து விசாரணைகள் மேற்கொள்வதற்கான சுயாதீன விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று துணைவேந்தர், மாணவர்களுக்கு வாக்குறுதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Previous Post Next Post


Put your ad code here